‘கஜா’ புயல் எதிரொலி: 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

’கஜா’ புயல் எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-11-12 23:00 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், அண்ணாநகர்புதுத்தெரு, மந்திரிப்பட்டினம், செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டு மரங்கள் என சுமார் 4 ஆயிரம் நாட்டுபடகுகளும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகியபகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகளும் உள்ளன.

விசைப் படகு மீனவர்கள் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்களிலும் மற்ற நாட்களில் நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘கஜா’ புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படும் என்றும், கனமழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இதன் காரணமாக மீன்வளத்துறையினர் விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கவில்லை.இதனால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்