மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-11-13 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம், ஜாண்பால் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் (வயது 59), மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு மணவாளக்குறிச்சியில் இருந்து கடியப்பட்டணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வள்ளியாற்றுபாலம் பகுதியில் சென்ற  போது, பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள், அகஸ்டின் சென்ற வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் அகஸ்டின் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தலை மற்றும் உடலில் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். அவர்கள் அகஸ்டினை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அகஸ்டின் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அஸ்டினின் மனைவி பெனஸ்தி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்டின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்