கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-13 22:00 GMT
பொன்னேரி,

மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை, போனசை வாரியமே நேரடியாக வழங்கவேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை அனல்மின் நிலையம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.

இதில் சி.ஐ.டி.யு. செயலாளர் சுந்தரம், மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல் மின் நிலைய தலைவர் வெங்கட்டையன் கூறும்போது:-

ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வருகிற 16-ந்தேதி குறளகத்தில் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது.

இதில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்