தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-11-13 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகா தீபத்திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் கிரிவலப் பாதையில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொள்ள நேற்று பேட்டரி காரில் சென்றார். ஆய்வில் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கிரிவலப் பாதையில் பொதுமக்கள் மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள நடைபாதையில் சிலர் கடைகள் வைத்து இருந்தனர். இந்த கடைகளை உடனடியாக அகற்ற கலெக்டர் போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சில இடங்களில் கடைகள் மற்றும் வீடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் கார்களை கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த பிளாட்பாரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். அவர்களிடம் கலெக்டர் நேரில் சென்று “காரை இந்த இடங்களில் நிறுத்த கூடாது என்றும், இனி நிறுத்தினால் கார் பறிமுதல் செய்யப்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் அபயமண்டபம் எதிரில் பக்தர்களுக்காக கட்டப்பட்டு வரும் ஓய்வறையை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார். இது குறித்து நிருபர்களிடம் கலெக்டர் கூறுகையில், “கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

கிரிவலப் பாதையில் ஆன்மிக பாடல் ஒலிப்பதற்காக ஒலிபெருக்கிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது” என்றார். அப்போது உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, நகராட்சி ஆணையர் பாரிஜாதம் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்