ராமநாதபுரம் இரட்டை கொலை: சரணடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை

ராமநாதபுரத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த வாலிபரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2018-11-13 22:53 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கடந்த 16–ந்தேதி மாலை வாலாந்தரவையை சேர்ந்த கார்த்திக் மற்றும் கருவேப்பிலைக்கார தெருவை சேர்ந்த விக்னேஷ்பிரபு ஆகியோரை காரில் வந்த மர்ம கும்பல் வெடிகுண்டுவீசி தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. பரபரப்பான இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் சரணடைந்த நிலையில் கேணிக்கரை போலீசார் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் இச் சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலாந்தரவை அம்மன்கோவில் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் தவம்அறிவழகன்(வயது 26) என்பவர் கடந்த மாதம் 31–ந்தேதி புதுக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே கேணிக்கரை போலீசார் வழக்கு விசாரணைக்காக தவம்அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண்–2ல் மனுத்தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தவம் அறிவழகனிடம் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவம்அறிவழகன் இரட்டைகொலை சம்பவத்தின்போது காரை ஓட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்