சோபனபுரம் பூஞ்சோலை அம்மன் கோவிலில் 2 தேர்களுக்கு புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டன

சோபனபுரம் பூஞ்சோலை அம்மன் கோவிலில் உள்ள 2 தேர்களுக்கு புதிதாக செய்யப்பட்ட இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

Update: 2018-11-14 22:30 GMT
உப்பிலியபுரம்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த சோபனபுரத்தில் பூஞ்சோலை அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில் 1955-ம் ஆண்டு கட்டப்பட்டு அந்த ஆண்டே மரத்திலான 2 தேர்கள் செய்யப்பட்டு இன்றளவும் திருவிழா நாட்களில் தேர்பவனி நடத்தப்பட்டு வந்தது. தற்போது தேரின் சக்கரங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் பொது மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் முறையிட்டனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் மற்றும் தேர்களை பார்வையிட்டு உடனடியாக திருச்சி பாய்லர் ஆலை நிறுவனத்தில் இரண்டு தேர்களுக்கும் இரும்பு சக்கரங்கள் செய்ய ஆர்டர் கொடுத்தனர். ரூ.3½ லட்சம் செலவில் செய்யப்பட்ட இரும்பு சக்கரங்கள் நேற்று காலை 9மணிக்கு தேர்களுக்கு பொருத்தப்பட்டன. இது இந்துசமய அறநிலையத்துறை நிதியில் செய்யப்பட்டதாகும்.

துறையூர் அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயா தலைமையில் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து புதிதாக செய்யப்பட்ட இரும்பு சக்கரங்கள் தேர்களில் பொருத்தப்பட்டன. புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் பக்தர்கள் தேரினை இழுத்துப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். தேரின் வெள்ளோட்டம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று விரைவில் நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்