லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் மீட்பு

லட்சத்தீவு அருகே ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் 13 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2018-11-14 23:00 GMT
கருங்கல்,

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த யாக்கோப்புக்கு சொந்தமான விசைப்படகில் கிறிஸ்து தாஸ் (வயது 40), கிரண், நெர்ஷன் உள்பட 13 மீனவர்கள் கடந்த மாதம் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இதில் குமரி மாவட்டம் மற்றும் கேரளா, வடமாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் இருந்தனர்.

அவர்கள், ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் போது, படகின் என்ஜின் பழுதடைந்தது. இதனால் கடலில் மேற்கொண்டு படகை இயக்க முடியாமல் தவித்தனர். இதற்கிடையே படகு காற்றின் திசைக்கு ஏற்ப லட்சத்தீவு அருகே சென்றது. இதுகுறித்த தகவல் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பினருக்கு தெரியவந்தது. அவர்கள் ஆழ்கடலில் பரிதவிக்கும் மீனவர்களை மீட்கக்கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கும் மனு அனுப்பினார்கள்.

அதன்பேரில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் தேடும் பணி நடந்தது. பின்னர் ஆழ்கடலில் பரிதவித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். மேலும், அவர்களின் பழுதடைந்த விசைப்படகையும் லட்சத்தீவில் பாதுகாப்பாக சேர்த்தனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த கடலோர காவல்படைக்கும் மற்றும் தமிழக-கேரள முதல்-அமைச்சர்களுக்கும், மீன்வளத்துறைக்கும் மீனவர்களின் உறவினர்கள், தெற்காசிய மீனவ தோழமை அமைப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை தெற்காசிய மீனவ தோழமை செயலாளர் சர்ச்சில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்