சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு முதியவர் உள்பட 2 பேர் சாவு

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் ரெயிலில் அடிபட்டு முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-11-15 22:30 GMT
சூரமங்கலம், 

சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள சேலம்-கரூர் தண்டவாள பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பெரிய சீரகாபாடி பகுதியை சேர்ந்த தொழிலாளி பெருமாள் (வயது 45) என்பதும், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதையடுத்து பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் ஜங்சன் ரெயில்நிலையம் அடுத்துள்ள ஜோலார்பேட்டை செல்லும் தண்டவாள பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு நேற்று இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதில், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்