சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடிப்பு திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி அருகே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-15 22:30 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ளது சாத்தநத்தம் கிராமம். இங்குள்ள தெற்கு காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாக காலனி பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக அவர்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்றும் குடிநீர் பிடித்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் கிராமத்தில் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் அந்த வழியாக திட்டக்குடி நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த அரசு பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்