நாகை, திருவாரூரில் அரசாணை நகலை எரித்து அரசு ஊழியர்கள் போராட்டம்

நாகை, திருவாரூரில் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அரசாணை நகலை எரித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-15 22:45 GMT
திருவாரூர்,

தமிழக அரசு துறைகளில் 4 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. அரசாணை எண்.56 மூலமும் பதிவு செய்து காத்திருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறி போகும். எனவே இளைஞர்களை வேலை வாய்ப்பினை பறிக்கும் அரசாணை எண்.56-ஐ ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசாணை எண்.56 நகலை எரித்து போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவநாதன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மூர்த்தி, பிரகாஷ், தியாகராஜன், மகாலிங்கம், சுந்தரலிங்கம், சின்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல நாகை அவுரித்திடலில் அரசு ஊழியர்கள் அரசாணை எண்.56 நகலை எரித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். முடிவில் பொருளாளர் ராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்