கடையம் அருகே பலத்த மழை: ஆலையின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கடையம் அருகே பெய்த பலத்த மழைக்கு ஆலையின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-11-15 22:30 GMT
கடையம், 

கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியில் தனியார் கிரஷர் ஆலை உள்ளது. இங்கு நெல்லையப்பபுரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜலிங்கராஜா (வயது 57) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் ஆலையில் பணியில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆலையில் உள்ள ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

இதில் அருகில் நின்ற ராஜலிங்கராஜா சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த மழைக்கு ஆலையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்