த.மு.மு.க. கொடிக்கம்பத்தை பிடுங்கிய மர்ம நபர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

வத்தலக்குண்டுவில் த.மு.மு.க. கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் பிடுங்கி சென்றதால் சாலை மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-11-15 22:45 GMT
வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோட்டில் காவலர் குடியிருப்பு அருகே த.மு.மு.க. கொடிக் கம்பம் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அந்த கொடிக்கம்பத்தை காணவில்லை. அதேபோல் புதுப்பட்டி சாலையில் சின்னபள்ளிவாசல் பகுதியில் இருந்த கொடியையும் காணவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பெரிய பள்ளிவாசல் அருகே திரண்டனர்.

மேலும் சாலையில் மோட்டார் சைக்கிள்களை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது கொடிக்கம்பத்தை பிடுங்கி சென்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து வத்தலக் குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொடிக்கம்பத்தை பிடுங்கி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக த.மு.மு.க. நகர செயலாளர் முகமதுரிஜால் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்