பழனியில் பரபரப்பு: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை

பழனியில், தலையில் கல்லைப்போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2018-11-15 22:15 GMT
பழனி,

பழனி இடும்பன் கோவில் பைபாஸ் ரோட்டில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே ஒரு வாழைத்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற தொழிலாளர்கள் சிலர் பார்த்து பழனி அடிவாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிணமாக கிடந்த வாலிபரின் நசுங்கியபடி இருந்தது. உடல் அருகில் ரத்தக்கறை படிந்த கல் ஒன்று கிடப்பதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அந்த வாலிபரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொன்று இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவரின் சட்டைப்பையில் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா? என போலீசார் சோதனையிட்டனர். அப்போது கோவையை சேர்ந்த சமையல் ஒப்பந்தக்காரர் ஒருவரின் முகவரி அட்டை(விசிட்டிங் கார்டு) இருந்தது. அந்த முகவரி அட்டையில் சில செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது மார்பில் லிங்கம், கழுகு உருவங்கள் பச்சை குத்தப்பட்டுள்ளது. பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகவரி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, இறந்தவர் கோவையை சேர்ந்த சமையல்காரராக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்