முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

புயல் பாதுகாப்பு முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

Update: 2018-11-15 22:45 GMT
கபிஸ்தலம்,

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் பற்றி அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நெடுஞ்சாலை துறை, சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயலில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகாமில் தங்கி உள்ளவர் களுக்கு தட்டுப்பாடின்றி உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் புயல் பாதுகாப்பிற்காக 25-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பாபநாசம் காப்பன் தெரு பகுதியில் கூரை வீட்டில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து, அவர்களை பத்திரமாக புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்கும்படி அறிவுறுத்தினார்.

அப்போது அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியதலைவர் மோகன், நகர வங்கி தலைவர் சபேசன், துணைத்தலைவர் சதீஷ், இயக்குனர்கள் முருகதாஸ், பாலு, தாசில்தார் மாணிக்கராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மலர்க்குழலி, பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், ஆணையர் நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

கஜா புயலையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுவாமிமலை போலீஸ் நிலையத்தின் முன் பகுதியில் இருந்த பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த பணியில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசி அய்யா மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்