செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லர் கைது

மயிலாப்பூரில் செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டெய்லரை வீட்டின் கதவை உடைத்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-15 21:57 GMT
அடையாறு,

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ரவி (வயது 56). டெய்லர். நேற்றுமுன்தினம் இரவு இவரது மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றார். இதனால் ரவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 5-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை நைசாக பேசி வீட்டுக்குள் அழைத்து சென்றார்.

பின்னர் வீட்டின் கதவை பூட்டிய அவர், தனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை சிறுமிக்கு காட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி கூச்சலிட்டார். இதையடுத்து ரவி சிறுமியை கையை பிடித்து முறுக்கி சத்தம் போடக்கூடாது என மிரட்டினார்.

இதற்கிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ரவியின் வீட்டு கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் ரவியை பிடித்து வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் பொதுமக்களிடம் இருந்து ரவியை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இதுபற்றி போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். அதில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் ரவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்