புடவை திருடியதாக திட்டியதால் துணிக்கடை பெண் ஊழியர் தீக்குளித்தார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே, புடவை திருடியதாக திட்டியதால் துணிக்கடை பெண் ஊழியர் தீக்குளித்தால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-11-16 22:15 GMT
பெரம்பூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராமதிலகம் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமதிலகம், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் வழக்கம்போல் துணிக்கடையில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கடையில் உள்ள ஒரு புடவை திருடுபோனதாகவும், அதை ராமதிலகம் திருடிவிட்டதாக கூறி துணிக்கடையில் உள்ளவர்கள் அவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த ராமதிலகம், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்