பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-11-17 22:15 GMT
திருச்சி,

தமிழகத்தில் அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், திருவாரூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், ராபி 2018-19 நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு நிறுவனத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யும், பயிர் கடன் பெறும் மற்றும் பயிர் கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை சேரலாம். கடன் பெறும் விவசாயிகள் தங்களுடைய வங்கி மூலமாகவே இத்திட்டத்தில் கட்டாய அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பயிர் கடன் பெறாத விவசாயிகள் தாங்கள் பயிர் செய்ததற்கான சான்றிதழ்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கலுடன் இணைத்து முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்து பிரீமிய தொகையை சேர்த்து தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியில் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்.

பொது சேவை மையங்கள் மூலம்...

காப்பீடு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும் இத்திட்டத்தில் சேரலாம். மேலும் இத்திட்டத்தின் முழு விவரங்களை அருகில் உள்ள வேளாண்மை கூட்டுறவு துறை அதிகாரிகள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பயிர் காப்பீடு நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இந்த தகவல் வேளாண் காப்பீடு நிறுவனத்தின் மண்டல அதிகாரி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்