கடலூரில் 6 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் - அதிகளவு மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

கடலூரில் 6 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-11-17 22:37 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டிணம், அக்கரைக்கோரி, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமான விசை மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்படித்து வருவது வழக்கம். வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம் மற்றும் முதுநகர் மீன் அங்காடி, விற்பனை நிலையங்கள், திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட் போன்றவை வெறிச்சோடி காணப்பட்டது.

‘கஜா’ புயல் கரையை கடந்த பின், கடல் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. எனவே கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் நேற்று அதிகாலை முதல் மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகில் சென்றவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகிறார்கள். பைபர் படகுகளில் சென்ற மீனவர்களின் வலைகளில் வழக்கத்தை விட அதிகளவு மீன்கள் சிக்கின. குறிப்பாக கானாங்கத்தை, கவலை, சங்கரா, பாறை, இறால் உள்ளிட்ட பல வகையான மீன்களும், நண்டுகளும் கிடைத்தன. இதனால் மீனவர்கள், கடலூர் துறைமுகத்துக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர். மீனவர்களின் வருகைக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் பைபர் படகுகள் முழுவதும் மீன்களாக காட்சி அளித்தன.

இதையடுத்து துறைமுகத்தில் மீன்கள் ஏலம் விடப்பட்டன. இந்த மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். மீன்களை வாங்க நகர வாசிகளும் துறைமுகத்துக்கு படையெடுத்துச்சென்றதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதனால் கடலூர் துறைமுகப்பகுதி 6 நாட்களுக்கு பிறகு நேற்று களைகட்டியது.

இதேபோல் கடலூர் முதுநகரில் உள்ள மீன் அங்காடி, திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள மீன் அங்காடி, மஞ்சக்குப்பம் மீன் மார்க்கெட்டிற்கும் மீன்கள் வரத்து அதிகளவு இருந்தது. நகர மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச்சென்றனர்.

மேலும் செய்திகள்