கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 30 குடும்பங்கள் - அதிகாரிகள் விசாரணை

கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 30 குடும்பங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-18 21:30 GMT
உத்தமபாளையம்,

சின்னமனூர் அருகே கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு 30 குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கிராம மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊத்துப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வருபவர்களின் குழந்தைகள் வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் தங்கி படித்து வருகின்றனர்.

இதேபோல் சிலர் அரசு பணி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இதில் சிலர் காதலித்து கலப்பு திருமணங்கள் செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக கிராமத்தில் காதல் திருமணம் மற்றும் கலப்பு திருமணங்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம கமிட்டி நிர்வாகிகள் கூடி, கலப்பு திருமணம் மற்றும் காதல் திருமணம் செய்தவர்களின் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்று முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஊரில் கலப்பு திருமணம் செய்தவர்கள் வீடுகளில் விசேஷம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது. திருவிழா காலங்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வரி வசூல் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

சொந்த ஊரிலேயே பல வருடங்களாக வாழ்ந்து விட்டு, இன்றைக்கு அகதிகள் போல் கலப்பு திருமணம் செய்தவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் புகார் மனு அளித்தனர். அதில் கலப்பு திருமணம் செய்ததால் 30 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்து இருந்தனர். அந்த மனு மீது விசாரணை நடத்த உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் சப்-கலெக்டர் உத்தரவின்பேரில் ஊத்துப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களை தனித்தனியாக அழைத்து உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து உத்தமபாளையம் சப்-கலெக்டரிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார் மனுவின்படி, முதல் கட்ட விசாரணை நடத்த தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்களிடம் விசாரணை அறிக்கை பெறப்படும். கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட நபர்களை ஒதுக்கி வைக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவ்வாறு ஒதுக்கி வைத்தது உண்மை என கண்டறியபட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்