கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு: முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு

எருப்பட்டி அருகே கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-19 22:15 GMT
எருமப்பட்டி, 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கஸ்தூரிபட்டியில் பாவாயி அம்மன் கோவில் உள்ளது. இதில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஒரு தரப்பினர் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோவில் அருகே திரண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கோவில் திருவிழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடுகளை செய்தனர். பாவாயி அம்மன் கோவில் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர். கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து மணி என்ற சின்னமுத்து (வயது 79) என்பவர் நேற்று திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தீயை அணைத்து முதியவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளித்த சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்