அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-19 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 30). இவரது கணவர் ரமேஷ். சென்னையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். இவர்களுக்கு ராகுல்(5), ரகு(3) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி அன்று ரமேஷின் உடலில் பலத்த காயங்களுடன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் எனது கணவர் சாவில் 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஜெயலட்சுமி புகார் அளித்தார்.

ஆனால் இதுவரை அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயலட்சுமி, தனது குழந்தைகளுடன் சென்று மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளியை சுற்றி குப்பைகள் தேங்கி கிடப்பதால் மாணவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரியாத்துக்குறிச்சி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த பொது பாதையை தற்போது சிலர் முள்வேலி அமைத்து அடைத்து விட்டனர். இது குறித்து தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 2 முறை அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பின்னர் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்