ஆர்.எஸ்.மங்கலம் அருகே பதுக்கி வைத்திருந்த ஆற்று மணல் பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பதுக்கி வைத்திருந்த ஆற்று மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-20 22:30 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, வரவணி பரமக்குடி கிராமத்தில் ஓரிடத்தில் ஆற்றுமணலை பதுக்கி வைத்து வணிக நோக்கத்தில் விற்பனை செய்து வருவதாக தாலுகா அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தாசில்தார் தமீம்ராஜா, மண்டல தாசில்தார் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர்கள் சிராஸ்தீன், கோபிநாதன் ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிக்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்டு இந்த கிட்டங்கியில் மணலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அந்த மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தாசில்தார் தமீம்ராஜா கூறும்போது, “அரசு அங்கீகாரம் இல்லாமல் இதுபோன்று வணிக நோக்கத்திற்காக கனிம வளங்களை பதுக்கி வைத்திருப்பது குற்றமாகும். இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்