பட்டா மாறுதலுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில்

அருப்புக்கோட்டை அருகே பட்டா மாறுதலுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2018-11-20 22:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது65). இவர் ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி. இவர் தனது மகன் ராஜ்குமார் பெயரில் இடம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதலுக்கு கோவிலாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் துரைப்பாண்டி (53) என்பவரை அணுகியுள்ளார். இவர் இதற்காக ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பேசி முடித்துள்ளார்கள்.

இதனைத் தர மனதில்லாத ராதாகிருஷ்ணன், விருதுநகரில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில் 5.11.2007 அன்று கோவிலாங்குளத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில், துரைப்பாண்டியிடம் லஞ்சப் பணம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் துரைப்பாண்டியை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சம்பத்குமார் விசாரித்து துரைப்பாண்டிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்