சிதம்பரத்தில்: திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது - 12 பவுன் நகை பறிமுதல்

சிதம்பரத்தில் திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-11-20 21:30 GMT
சிதம்பரம்,


சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் செட்டிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி, விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த துரியோதரன் மகன் சூர்யா என்கிற மணிகண்டன்(வயது 21), புதுச்சேரி மாரியம்மன் கோவில் தெரு முனுசாமி மகன் அரவிந்த்(20) என்பதும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புதுச்சேரி வில்லியநல்லூரை சேர்ந்த குளத்துமேட்டு தெரு ஜான்பாஷா இவரது மகன் ஷாஜகான்(22) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மணலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஷாஜகான் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் திருடி வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், அவர்களிடம் 12 பவுன் நகை இருந்தது. இந்த நகையை அவர்கள் திருடி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மணிகண்டன், அரவிந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது ஏற்கனவே அண்ணாமலை நகர், சிதம்பர நகர போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்