பெரம்பலூரில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 2 பேர் சாவு

பெரம்பலூரில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-11-22 22:15 GMT
பெரம்பலூர்,

குடிநீர் என நினைத்து...

பெரம்பலூர் தலைமை அஞ்சலக தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை. இவரது மனைவி சாஜீத் பீபி (வயது 67). இவர் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் குடிநீர் என கருதி, பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்து விட்டாராம். இதனையறிந்த அவரது குடும்பத்தினர், சாஜீத் பீபியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாஜீத் பீபி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

பெரம்பலூர் அருகேயுள்ள எசனை ரெட்டைமலை சந்து பகுதியை சேர்ந்தவர் ராஜூ (55). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் மனமுடைந்த ராஜூ நேற்று முன்தினம் மாலை மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். இதனை அறிந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜூ நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்