திருவாரூரில், 6 வயது சிறுவன் கொலை - சாக்கு மூட்டையில் உடலை கட்டி வாய்க்காலில் வீசிய கொடூரம்

திருவாரூரில், 6 வயது சிறுவனை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர்.

Update: 2018-11-24 22:53 GMT
திருவாரூர்,

திருவாரூரில், 6 வயது சிறுவனை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் நாகை சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகில் செல்லும் வாய்க்கால் புகையிலை தோட்டம், மில்தெரு வழியாக சென்று ஓடம்போக்கி ஆற்றில் கலக்கிறது. நேற்று காலை இந்த வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அருகில் உள்ள மண்டபத்தின் காவலர் வாய்க்கால் பகுதிக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அங்கு ஒரு சாக்கு மூட்டை மிதந்துள்ளது. இதனால் யாரோ செத்து போன நாயை சாக்கு மூட்டையில் கட்டி வீசியுள்ளதாக நினைத்து அதனை அப்புறப்படுத்திட எடுத்துள்ளார். அப்போது அந்த சாக்கு மூட்டையில் 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் உடல் அழுகிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சாக்கு மூட்டையில் இருந்த உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் யார் அந்த சிறுவன்? எந்த ஊரை சேர்ந்தவன்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், சிறுவனை கொன்று அவனது உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி வாய்க்காலில் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது. இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

6 வயது சிறுவனை கொன்று சாக்கு மூட்டையில் உடலை கட்டி வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்