காஞ்சீபுரத்தில் கத்திமுனையில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு வாலிபர் கைது

காஞ்சீபுரத்தில் கத்திமுனையில் மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-25 22:45 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 43). ஆட்டோ டிரைவரான இவரிடம் சாலைத்தெருவில் ஒரு வாலிபர் ஒலிமுகமதுபேட்டைக்கு செல்ல வேண்டும் என்று ஆட்டோவில் ஏறினார். ஒலிமுகமதுபேட்டை என்ற இடத்தில் அந்த வாலிபர் பணம் கொடுக்காமல் கீழே இறங்கினார்.

உடனே ஆட்டோ டிரைவர் நடராஜன், ஆட்டோவில் வந்ததற்கான பணத்தை கொடு என்று கேட்டார். நானே ஒரு ரவுடி என்னிடம் பணம் கேட்கிறாயா? என்று கூறி அந்த வாலிபர் ஆட்டோ டிரைவர் நடராஜனை கத்திமுனையில் மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1850-ஐ பறித்து விட்டு தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து ஆட்டோ டிரைவர் நடராஜன் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துளசி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஆட்டோ டிரைவர் நடராஜனை மிரட்டி பணம் பறித்தது காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் பின்புறம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னா என்கிற வினோத்குமார் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.930, கத்தி போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன.

கைது செய்யப்பட்ட சின்னாவை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையொட்டி அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்