தாராசுரத்தில் பரிதாபம்: போக்குவரத்துக்கழக பணியாளர் ரெயிலில் அடிபட்டு சாவு தற்கொலையா? போலீசார் விசாரணை

தாராசுரத்தில் போக்குவரத்துக்கழக பணியாளர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-26 20:04 GMT
கும்பகோணம்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது21). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பயிற்சி பணியாளராக வேலைபார்த்து வந்தார்.

இவர் நேற்று கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ரெயில் நிலையத்துக்கு சென்று இருந்தார். அப்போது ரெயிலில் அடிபட்டு பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ரெயில்வே போலீசார் தாராசுரம் ரெயில் நிலையத்துக்கு சென்று பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில், நேற்றுமுன்தினம் கும்பகோணத்துக்கு வேலைக்கு வந்த பாலசுப்பிரமணியன், அதன் பின்னர் வீட்டுக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. அவர் தாராசுரம் ரெயில் நிலையத்துக்கு ஏன் சென்றார்? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதியதா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்