கரூர் அருகே பரிதாபம்: தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பலி - டிரைவர் கைது

கரூர் அருகே தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-27 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே சங்கரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவருடைய மனைவி துர்காதேவி (25). இவர்களுக்கு பரணிதா (5) என்ற மகளும், பிரவீன் (2) என்ற மகனும் உள்ளனர். இதில் பரணிதா அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். இவள் தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகே வந்து நின்ற பள்ளி வேனில் மகள் பரணிதாவை, துர்காதேவி ஏற்றி விட்டார். அந்த சமயத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிரவீன் வெளியே ஓடி வந்து, பள்ளி வேனின் முன்புறத்தில் நின்று கொண்டிருந்தான்.

இதனை அறியாத துர்காதேவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பள்ளி வேனை, அதன் டிரைவர் கரூர் அரசு காலனியை சேர்ந்த மனோகரன் (53) முன்னோக்கி இயக்கினார். இதில் வேன் சக்கரத்தில் சிக்கிய பிரவீன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதைக்கண்ட துர்காதேவி அவரது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி வேன் டிரைவர் மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தினை ஏற்படுத்திய பள்ளி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்