ரெயிலில் அடிபட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி : கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்

கற்பழிப்பு புகாரில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி பலியானார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-27 21:55 GMT
புனே,

மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வந்தவர் சாஜன் சானப் (வயது37). இவர் 2 நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான நாசிக் சென்றிருந்தார்.

இந்தநிலையில், நேற்று அவர் புனே வந்திருந்தார். அப்போது அவர் சிவாஜி நகர் பகுதியில் உள்ள சங்கம் மேம்பாலம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில், அந்த வழியாக வேகமாக வந்த ரெயில் ஒன்று அவர் மீது மோதி சென்றது.

ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சாஜன் சானப் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் சாஜன் சானப் மீது நாசிக்கில் ஒரு பெண் கற்பழிப்பு புகார் கொடுத்து இருந்தது தெரிய வந்தது. எனவே அவர் தண்டவாளத்தை கடந்த போது, ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? அல்லது கற்பழிப்பு புகாரில் சிக்கிய விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்