திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை

திருச்சி விமானநிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-29 22:45 GMT
செம்பட்டு,

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானசேவை மட்டுமின்றி, சிங்கப்பூர், துபாய், இலங்கை, மலேசியா, சவுதிஅரேபியா உள்பட பல நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமானநிலையம் வழியாக பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் விமானநிலையத்தில் சுங்கத்துறை வான்நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடத்தல் தங்கம் பறிமுதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது திருவாரூரை சேர்ந்த கவிதா மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ.7 லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள 232 கிராம் தங்கம் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக பிடிபட்ட பெண் உள்பட 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்