புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது கமல்ஹாசன் பேட்டி

புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2018-12-01 23:15 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புள்ளான்விடுதி, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடைவீதிகளில் மக்களை சந்தித்தார். வடகாடு கிராமத்தில் நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்குவார்கள் என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.

பின்னர் நெடுவாசல் கிராமத்தில் நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்கி வருவதாக கூறுகின்றது. ஆனால் களத்தில் உள்ள மக்களை சந்திக்கையில் அவர்கள் சொல்வதற்கு மாறாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புயல் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது. மேகதாது அணை பிரச்சினையில் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். போராட்டங்கள் சொல்லும் போராட்டமாக இல்லாமல் வெல்லும் போராட்டமாக இருக்க வேண்டும்.

மத்திய அரசிடம் தமிழக அரசு புயல் நிவாரண நிதி கேட்டுள்ளது. யார் நிதி கேட்கிறார்கள், என்ன காரணம் சொல்லி கேட்கிறார்கள் என்பதை பொருத்தே மத்திய அரசு நிதி ஒதுக்கும். ஸ்டெர்லைட் ஆலை குறித்து தற்போது வந்துள்ள ஆய்வறிக்கை சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்