புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பட்டுக்கோட்டை அருகே கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

Update: 2018-12-02 23:00 GMT
பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டையை அடுத்த வெண்டாக்கோட்டை கிராம மக்களுக்கு புயல் நிவாரணம் வழங்கக்கோரி பட்டுக்கோட்டை வளவன்புரம் அருகே 4 ரோடுகள் சந்திக்கும் பைபாஸ் சாலையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது வெண்டாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திரளானோர் வேன்களிலும், டிராக்டர்களிலும் வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.ஆர்.ஓ. சக்திவேல், தாசில்தார் சாந்தகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று டி.ஆர்.ஓ சக்திவேல் உறுதி அளித்தார்.

அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- மதுக்கூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்