உப்பிலியபுரம் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

உப்பிலியபுரம் அருகே லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-12-02 22:45 GMT
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கிரஷர் ஆலைக்கு கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்தது. அதனை முசிறி தாலுகா கட்டணாம்பட்டி அருகே உள்ள சந்தனப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 31) ஓட்டினார். கிரஷரில் உள்ள மேடான பகுதியில் லாரியை நிறுத்தி, டிப்பரை தூக்கிவிட்டால், அதில் உள்ள கற்கள், அவற்றை உடைக்கும் சங்கிலியில் போய் விழும்.

அந்த இடத்தில் லாரியை நிறுத்தியபோது எதிர்பாராதவிதமாக லாரி பின்னோக்கி நகர்ந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் வந்த தொழிலாளர்கள், லாரி கவிழ்ந்து கிடப்பதையும், சுப்பிரமணியன் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் கண்டு, அவரை மீட்டு உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்