சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் சரண கோஷ ஊர்வலம்

குமாரபாளையத்தில் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வலியுறுத்தி அய்யப்ப பக்தர்கள் சார்பில் சரண கோஷ ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2018-12-02 22:45 GMT
குமாரபாளையம்,

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வலியுத்தி அய்யப்ப பக்தர்கள் சார்பில் குமாரபாளையத்தில் சரண கோஷ ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு குருசாமி ஆண்டாள் ஆர்.எஸ்.ராஜூ தலைமை தாங்கினார். குருசாமிகள் நாச்சிமுத்து, சுப்புராம், கந்தசாமி, குமார், ராஜா, கணபதி, பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குருசாமி ஜெகதீஸ் கூறுகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி, புனித யாத்திரை பயணமாக பயபக்தியுடன் செல்வது வழக்கம். இந்த ஆன்மிக வழிபாட்டையும், பாரம்பரியத்தை காக்கும் வகையிலும் 10 வயதுக்கு மேலும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் சபரிமலை செல்லும் எண்ணம் வரக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆன்மிக சரண கோஷ ஊர்வலம் நடைபெறுகிறது என்றார்.

இந்த ஊர்வலம் அம்மன் நகர், நாராயண நகர், பள்ளிபாளையம் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட முக்கிய வழியாக சென்று நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அய்யப்ப பிரார்த்தனை மண்டபத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இதில் திரளான அய்யப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சரண கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

மேலும் செய்திகள்