“தி.மு.க. எத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்” அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

எத்தனை கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி வைத்தாலும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2018-12-02 23:30 GMT

மதுரை,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 2–ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 5–ந்தேதி காலை சென்னையிலும், அன்றைய தினம் மாலை மதுரையிலும் கடைபிடிக்கப்படுகிறது. அதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மாநகர் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

முன்னதாக, செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்தியாவின் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 2–ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 5–ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தற்போது நடக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினி வெற்றி பெறுவார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

அதேபோல தி.மு.க. எத்தனை கட்சிகளுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கட்டும். அவர்களை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். மக்கள் தான் எங்கள் கூட்டணி. நாங்கள் வெற்றி பெறுவோம். கஜா புயல் நிவாரணத்துக்காக முதற்கட்டமாக குறைவான நிதி கிடைத்தபோதும், நாங்கள் நிவாரண பணிகளை நிறைவாக செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்