புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், பெண்கள் மனு

வடக்கட்டளை கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர்் அலுவலகத்தில், பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2018-12-03 22:45 GMT
திருவாரூர்,

கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்்குடி, திருவாரூர் ஆகிய பகுதிகள் மிக பெரும் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பழையனூர் ஊராட்சி வடக்கட்டளை கிராமத்தை சேர்ந்த பெண்கள், நிவாரண உதவிகள் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கூத்தாநல்லூர் தாலுகா பழையனூர் ஊராட்சி வடக்கட்டளை கிராமம் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து சிரமப்பட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தில் இதுவரை எந்த புயல் பாதிப்பு மீட்பு பணிகளும் நடைபெறவில்லை. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகள்

இதே போல் திருவாரூர் அருகே தியாகராஜபுரம் ஊராட்சி கீரங்கோட்டகம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 90 குடும்பங்கள் வசித்து வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி சிரமப்பட்டு வருகிறோம். மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்ததால் குடிக்க தண்ணீர் இல்லை. எனவே அத்தியாவசிய தேவையான குடிநீர் வினியோகிக்க வேண்டும். நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்