மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2018-12-03 22:45 GMT
பெரம்பலூர்,

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, உள்ளடக்கிய கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் நடந்தது. போட்டியினை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தொடங்கி வைத்தார். பலூன் உடைத்தல், கரண்டியில் எலுமிச்சைப்பழம் கொண்டு செல்லுதல், பந்து எறிதல், குண்டு எறிதல், வட்டத்தில் கல் எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் 90 மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் வட்டார கல்வி அதிகாரி செந்தாமரை செல்வி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார மேற்பார்வையாளர் தேவகி, மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ராஜா கலந்து கொண்டு பேட்டிகளை தொடங்கி வைத்தார். இதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன் முன்னிலை வகித்தார். மாற்றுதிறனாளி மாணவர் களுக்கிடையே பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், இசைநாற்காலி, ஓட்டபோட்டி, தவளை ஓட்டம், பேச்சுப்போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக வளமைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்று பேசினார். இதில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்