சேலத்தில்: திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-12-03 22:00 GMT
சேலம், 

சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சத்தியமூர்த்தி(வயது 32), தறித்தொழிலாளி. இவருக்கும், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இவர்களுடைய திருமணம் இந்த மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதனால் இருவீட்டார்களும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். மேலும் உறவினர்களுக்கு இருவீட்டு தரப்பிலும் திருமண பத்திரிகை கொடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதனிடையே இந்த திருமணத்தில் சத்தியமூர்த்திக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சத்தியமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சத்தியமூர்த்தியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நிச்சயதார்த்தம் செய்ததில் இருந்தே, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று பெற்றோரிடம் சத்தியமூர்த்தி கூறி வந்துள்ளார். மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்ததும், இதுகுறித்து வீட்டில் சொல்லாமல் மறைத்ததும் தெரியவந்தது.

இதனால் காதலியை மணக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மனமுடைந்து சத்தியமூர்த்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்