மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணிப்பு நோயாளிகள் அவதி

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு கரூர் அரசு மருத்துவ மனை டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-12-04 23:00 GMT
கரூர்,

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு 4, 9, 13 வருடங்களில் பணியை கடந்து செல்லும் போது அதற்கு ஏற்றவாறு ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்கிட வேண்டும். மத்திய அரசு டாக்டர்களுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு டாக்டர்களின் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. எனவே மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்களை டாக்டர் கள் நடத்தி வருகின்றனர். எனினும் கோரிக்கை கள் குறித்து அரசு நட வடிக்கை எடுக்க முன்வராததால் டிசம்பர் 4-ந்தேதி புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

அந்த வகையில் நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வழக்கமாக பரபரப்புடன் இயங்கும் புறநோயாளிகள் பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. சிகிச்சைக்காக வந்த சில நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததை கண்டதும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. இதனால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கரூர் அரசு மருத்துவமனையில் 70 டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே சில டாக்டர்கள் மட்டும் அமர்ந்து அத்தியாவசிய சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மட்டும் பரிசோதித்தனர். டெங்கு காய்ச்சல், விபத்தில் படுகாயம் அடைந்தோர் உள்ளிட்டோருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டன. மற்றபடி நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து வழங்குவது உள்ளிட்ட பணிகளில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் களும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்