தம்பதியை கொலை செய்ததாக கைதான குற்றவாளிகளை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

தம்பதியை கொலை செய்ததாக கைதான குற்றவாளிகளை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-12-05 00:18 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 72), வக்கீல். இவரது மனைவி ஹேமலதா (65). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் (நவம்பர்) 20–ந் தேதி வீட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்டனர். பணம்–நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த கார் டிரைவர் முகமது காசிம், அவரது நண்பர் முகமது இலியாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து நகை–பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் காலாப்பட்டு சிறையில் குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த வழக்கில் கைதான முகமது காசிம், முகமது இலியாஸ் ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த புதுச்சேரி 2–வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் மனுவை நீதிபதி தனலட்சுமி விசாரணை நடத்தி காசிம், முகமது இலியாஸ் ஆகியோரை 2 நாட்கள் போலீஸ் காவல் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அவர்கள் 2 பேரையும் உருளையன்பேட்டை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்