கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய போராட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் இரவு நேர தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.

Update: 2018-12-05 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் இரவு நேர தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும், புதிய கிராம நிர்வாகத்துறை ஏற்படுத்துதல் அவசியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் வட்ட தலைவர் செந்தில் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசங்கர், நாகேஸ்வரகாந்த், ஈஸ்வரி, விஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் விடிய, விடிய நடந்தது. அதாவது போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தாசில்தார் அலுவலகத்தில் இரவு முழுவதும் தர்ணா நடத்தினர்.

இதே போல் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டாரத்தலைவர் பாத்திமா ஷிபா தலைமை தாங்கினார். மாலையில் தொடங்கிய போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. 

மேலும் செய்திகள்