தொழில் அதிபரை கடத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு ஒருவர் கைது

தொழில் அதிபரை கடத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-05 23:15 GMT
அம்பர்நாத், 

தொழில் அதிபரை கடத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தொழில் அதிபர் கடத்தல்

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் அனில் கஞ்ஜனி (வயது 46). தொழில் அதிபர். இவருக்கு அண்மையில் ஒரு கும்பல் போன் செய்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து உள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, அவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தொழில் அதிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை அந்த கும்பலினர் மறுநாள் விடுவித்தனர்.

ஒருவர் கைது

வீட்டிற்கு வந்ததும் சம்பவம் குறித்து அவர் கொல்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தன்னிடம் பணம் பறிப்பதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. பப்பு கலானியின் மகன் ஓமி கலானி உள்பட 10 பேர் சேர்ந்து, தன்னை கடத்திச்சென்று தாக்கியதாக தெரிவித்து உள்ளார்.

அதன்பேரில் போலீசார் ஓமி கலானி உள்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய உல்லாஸ் நகரை சோ்ந்த சன்னி டேலேகர் (24) என்பவர் போலீசிடம் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். மற்ற 9 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்