இலவச தையல் பயிற்சிக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை: தஞ்சை போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகை

இலவச தையல் பயிற்சிக்கு ஊக்கத்தொகையை நிறுவனம் வழங்காததை கண்டித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-12-06 23:00 GMT
தஞ்சாவூர்,


பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான தொழிற்பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு அந்த நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

அதன்படி தஞ்சை தெற்கு வீதியில் உள்ள ஒரு நிறுவனம் இலவச தையல் பயிற்சியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தியது. இதில் தஞ்சை, ஒரத்தநாடு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என 61 பேர் பயிற்சி பெற்றனர்.


இவர்களுக்கு பயிற்சிக்கான ஊக்கத்தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பயிற்சி முடித்து பல மாதங்கள் ஆகியும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து பயிற்சி அளித்த நிறுவனத்திடம் கேட்ட போது ரூ.6 ஆயிரத்துக்கு, தையல் எந்திரம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். மீதி ரூ.9 ஆயிரம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் தையல் எந்திரம் மற்றும் உபகரணங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. பணமும் வழங்கப்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் அளித்தனர். புகாரை, தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து இந்த புகார் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.


இந்த நிலையில் பயிற்சி நிறுவனத்தை நடத்தியவர் நேற்று ஊக்கத்தொகைக்கான பணத்தை கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் கொடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகாரும் அளித்தனர். இதையடுத்து நிறுவனம் சார்பில் 1 வாரத்துக்குள் பணத்தை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்