திருச்சியில் கடன் சுமையால் பரிதாபம் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

திருச்சியில் கடன் சுமையால் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-06 22:15 GMT
திருச்சி,

திருச்சி கே.கே.நகர் களத்துவீடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வெள்ளையம்மாள்(வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகள் மித்ரா(4). இவர்களுடைய குடும்பத்தில் கடன் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து வெள்ளையம்மாளிடம் கடன்தொகையை கேட்டுள்ளனர். இதனால் அவர் மனவேதனை அடைந்தார். நாளுக்கு நாள் கடன் சுமை அதிகரித்தது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி முருகானந்தம் வேலை நிமித்தமாக கோவைக்கு சென்று இருந்தார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாதபோது, வெள்ளையம்மாள் தனது மகள் மித்ராவுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்தார். இதையடுத்து தாய், மகள் இருவரும் மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த உறவினர் ஒருவர், வெள்ளையம்மாள் குழந்தையுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளையம்மாள் இறந்தார்.

தொடர்ந்து குழந்தை மித்ராவுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்