படப்பை அருகே கத்திமுனையில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

மர்ம நபர்கள் இருவரும் படப்பை அருகே கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் கையில் வைத்திருந்த செல்போனையும் பறித்துள்ளனர்.

Update: 2018-12-06 21:45 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரில் உள்ள வெங்கட்ரமணன் ஐ.ஏ.எஸ். சாலையை சேர்ந்தவர் சிரஞ்சீவிராவ் (வயது 56). தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி ஜெயக்குமாரி (53). நேற்று காலை வழக்கம்போல் சிரஞ்சீவிராவ் வேலைக்கு சென்று விட்டார். ஜெயக்குமாரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜெயக்குமாரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு ஜெயக்குமாரி வீட்டின் உள்ளே சென்றபோது மர்ம நபர்கள் இருவரும் கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் கையில் வைத்திருந்த செல்போனையும் பறித்துள்ளனர்.

மேலும் அவரை மிரட்டி பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும் எடுத்து கொண்டனர். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், தலைமையில் ஒரகடம் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்