தஞ்சை அருகே இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது

தஞ்சை அருகே இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-06 22:15 GMT
சாலியமங்கலம்,

தஞ்சை அருகே சாலியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர், அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர். அந்த பெண் கபிஸ்தலம் அருகே மணலூரில் உள்ள ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த பெண் அங்கு உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அந்த பெண்ணை மீட்டனர்.

அவரிடம் கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாலியமங்கலம் அருகே உள்ள செண்பகபுரம் நத்தம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் தெட்சிணாமூர்த்தி(வயது 38) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

மேலும் தெட்சிணாமூர்த்தி அந்த பெண்ணை கடத்தி, மணலூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தெட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.

இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்