குன்னத்தூர் அருகே: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி கைது - கைது செய்யப்பட்ட மினியன்

குன்னத்தூர் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-12-06 22:00 GMT
குன்னத்தூர், 

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிரவெளி கிராமம் வடுக பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மினியன் (வயது 55). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் மினியன் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் வீடு திரும்பினார். அப்போது இரவு 7 மணிக்கு அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் 5 வயது உடைய 2 சிறுமிகள் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து வீட்டின் அருகே வைத்து மினியன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமிகள் அழத்தொடங்கினார்கள். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சிறுமிகளின் அழுகை சத்தம் கேட்டு, அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 சிறுமிகளை, மினியன் பாலியல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து சென்று மினியனை விசாரித்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குன்னத்தூரில் 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்