பட்டுக்கோட்டையில் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி ஊழியர் சாவு

பட்டுக்கோட்டையில், கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி. ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-12-07 21:45 GMT

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 45). இவர் தனியார் கேபிள் டி.வி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் ‘கஜா’ புயலினால் அறுந்து கிடந்த கேபிள் டி.வி. வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு உள்ள ஒரு கம்பத்தில் ஏறி, கேபிள் வயர்களை மாட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திருநாவுக்கரசு தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் திருநாவுக்கரசை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், திருநாவுக்கரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் திருநாவுக்கரசுவின் மனைவி ராஜாத்தி (35) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புயலில் அறுந்து விழுந்த கேபிள் வயர்களை சீரமைத்த ஊழியர் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்