பெருந்துறை அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது 17¾ பவுன் நகை மீட்பு

பெருந்துறை அருகே வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17¾ பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2018-12-07 22:30 GMT

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் நேற்று காலை, கோவை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்து கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.

இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோவை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஜெமிஷா (வயது 22), கோவை துடியலூரை சேர்ந்த அப்துல் மஜித் மகன் முபாரக் அலி (26) என்பது தெரிய வந்தது.

போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள் பெருந்துறை அருகே உள்ள வெள்ளியம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரது வீடு புகுந்து அவருடைய மனைவி மேனகாவின் 7¾ பவுன் தாலிச்சங்கிலி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி குடியிருப்பு பகுதியில் செவிலியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் கோமதியின் வீடு புகுந்து அவரது 10 பவுன் தாலிச்சங்கிலி ஆகியவற்றை திருடியதுடன், அந்த நகைகளை விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 17¾ பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்